ஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது?

ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ? எதனடிப்படையில்?

அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில் பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டியாக இருப்பதாக கூறுகின்றான். அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம் புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது.

இதற்கு சான்றாக 1431 ரமளான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃபானுடைய மாதம் 30 நாட்களை கொண்டதாக உள்ளது. அதில் நாம் கண்களால் எண்ணிக்கொள்ளும் 29 படித்தரங்கள் உள்ளது. அதாவது ஷஃபான் மாதம் திங்கள்கிழமை (12.07.2010) துவங்கியது. அன்று முதல் தேதிக்குரிய பிறையை நாம் கண்களால் மேற்கு பகுதியில் பார்க்க முடியும்.

அதே போல் ஷஃபான் மாதத்தின் 29 வது நாள் திங்கள்கிழமை(09.08.2010) ஆகும். அன்றைய தினத்தின் பிறையையும் நாம் கிழக்கு பகுதியில் பஜ்ர் நேரத்தில் கண்களால் பார்க்க முடியும். ஆக மொத்தம் ஷஃபான் மாதத்தின் 29 பிறைகளை நாம் கண்களால் காணும் நிலை உள்ளது. 29 வது நாளுடைய பிறையை நாம் கிழக்கு பகுதியில் பார்க்க முடிவதால் அன்றைய தினம் சந்திரனுடைய சுற்று முடிவடையாமல் இன்னும் ஷஃபான் மாதத்தில் ஒரு நாள் மீதம் உள்ளதை நாம் அறிய முடிகிறது.

எனவே பிறை தெரியாத நாளான செவ்வாய் கிழமையை (10.08.2010) ஷஃபான் மாதத்தின் முப்பதாவது நாளாக எண்ணிக் கொள்ள நமக்கு நபி(ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள். வானஇயற்பியல் கணக்கின் படியும் அன்றைய தினம் தான் சூரியன் சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டிற்கு வந்து 1431ஷஃபான் மாதத்தின் சுழற்சியை முடித்து, 1431ரமளான் மாதத்திற்கான சுழற்சியை துவங்குகிறது என்பது ஆதாரப்பூர்வமான யாரும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.



நமக்கு நபி(ஸல்) அவர்கள் 29 வது நாளுடைய பிறையை பார்த்து மாதத்தை ஆரம்பிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக சந்திரனின் அனைத்து படித்தரங்களையும், மன்ஸில்களையும் அறிந்து செயல்படுவது தான் குர்ஆன் ஹதீஸின் உடைய வழி முறையாகும். குழப்பமற்ற அல்லாஹ்வின் தெளிவான தீனுல் இஸ்லாத்தை சிந்திப்பவர்கள் மட்டுமே சரியாக புரிந்து செயல்பட முடியும்.

எனவே உலக மக்கள் அனைவரும் ஹிஜ்ரி 1431 ரமளான் மாதத்தை புதன்கிழமை (11.08.2010) அன்று துவங்கும் படி இந்திய ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.